Friday 26 April 2013

என்.வரிகளில்.வசிப்பவளுக்கு...

எண்ணில்லா எழில் இன்பமுண்டு
உன்னுள் எலாம் உட்பூட்டிக்கொண்டு
ஏதுமிலா பேதை தனை போல
பூமீது படரும் பனித்துளியாய்
புவிமீது நறுங்குளிர் போதையை
தெளித்துத்தூவிடும் ஒளிக்கோதை
நீ.....
******************************************************************
உன் பெயரும்
ஒரு கவிதை போலவே
கல்வி கேள்வி அறிவு அது
துளியும் இல்லாதவரும் கூட
மனம் கசிந்துருகி வாசிக்கும்
கவின் குளிர் கவிதை
நீ .......
********************************************************************
அமுத நிலவு,
தேன் நிலவு
பால் நிலவு,
சக்கரை நிலவு

இனிப்பின் பிணைப்புடையஅனைத்தோடும்
இனிப்பான இணைப்புனக்கு(ஒப்பீடு) சரி,
வெண்ணை விரும்பி கண்ணனை ஈர்த்தது போல
பரந்த அவ்வொப்பீட்டு பட்டியலில்
என்னை ஈர்த்திட்ட வெல்லமது இல்லையே ??
உள்ளம் கொள்ளைகொண்ட வெல்லமும் ஒப்பீட்டு பட்டியலில் இணைந்திட
வெல்லநிலா (மருவிய) வெள்ளை நிலா
நீ ....

********************************************************************
நினைவு தெரிந்த நாள் முதேலே
நிலவின் மீதெனக்கு
நிச்சயித்த நல்அபிப்பிராயம்
நிஜமாக இருந்ததில்லை அணுவும்

நித்திலமே உன் நினைவு
நிறை நிறையாய் மனம் நிறைய
நிலவென்றால் நிறை பிரியமெனும்
நிதர்சனத்தை உன்னால் நான் அறிய
நிலவை பற்றி வரிவரைகின்றேன்
நிதம் நிதம் நின் நினைவுகளுடன் ......

No comments:

Post a Comment